பிரான்ஸ் அதிபர் சர்கோஸ் மாஜி மனைவி மறுமணம்
நியூயார்க்: பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் முன்னாள் மனைவி செசிலியா சிகானர் அல்பெனிஸ், மொராக்கோவைச் சேர்ந்த தனது காதலரை நியூயார்க்கில் வைத்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் 150 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை இந்தத் திருமணம் நடந்தது.
செசிலியாவுக்கு இது 3வது திருமணம். அவரது 3வது கணவரான ரிச்சர்ட் அட்டியாஸ், மிகப் பெரும் கோடீஸ்வரர். திருமணம் நடந்த இடத்திற்கு பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நியூயார்க்கின் புகழ் பெற்ற ஹோட்டல்களில் ஒன்றான ரெயின்போ ரூம் என்ற ஹோட்டலின் 65வது மாடியில் இந்த வண்ணமிகு திருமணம் நடந்தது.
செசிலியாவை விவாகரத்து செய்த சர்கோஸி, கடந்த மாதம்தான் முன்னாள் மாடல் அழகியும், பாடகியுமான கார்லோஸ் ப்ரூனியை மணந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
திருமணம் சிறப்பாகவும், சிம்பிளாகவும் நடைபெற்றதாக, கல்யாணத்திற்கு 'பாட்டுக் கச்சேரி' நடத்த வந்திருந்த ஹார்லம் கோஸ்பஸ் காயர் குழுவைச் சேர்ந்த பாடகர்கள் தெரிவித்தனர். யூத முறைப்படி திருமணம் நடந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மிக மிக நெருங்கியவர்கள் மட்டுமே கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். செசிலியா தம்பதியினர் தேனிலவை எங்கே கொண்டாட திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
செசிலியாவுக்கு வயது 50 ஆகிறது. அவர் மணந்துள்ள அட்டியாஸுக்கு 48 வயது. சர்கோஸிக்கு வயது 53. சர்கோஸியும், செசிலியாவும் 11 ஆண்டுகள் வாழ்ந்தனர். கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்தனர். பிப்ரவரி மாதம் 40 வயதான ப்ரூனியை மணந்தார் சர்கோஸி.
சர்கோஸியை முதன் முதலில் செசிலியா சந்தித்தது 1984ம் ஆண்டில். அப்போது சர்கோஸி பாரீஸ் அருகே உள்ள நியூல்லி நகரின் மேயராக இருந்தார்.