கதிர்காமர் கொலை: பிரபாகரனுக்கு பிடிவாரண்ட்
கொழும்பு: முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்டோருக்கு கொழும்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
காவல்துறை தலைவர் விக்டர் பெரேரா மூலம் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கதிர்காமர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபாகரன், பொட்டுஅம்மான், சார்லஸ், மோதி மணிமேகலை, முத்தையன் சகாதேவன், ஆரோக்கியநாதன் மற்றும் வினோதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சார்லஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானப்படைத் தாக்குதலில் பலியானார்.
சமீபத்தில் கதிர்காமர் கொலையில், பிரபாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கொழும்பு நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் பிரபாகரன் உள்ளிட்டோரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு மொத்தம் 51 வழக்குகளில் பிரபாகரனை குற்றவாளி என அறிவித்த கொழும்பு நீதிமன்றம் அவருக்கு மொத்தமாக 200 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.