முக்கிய கட்சியில் இணைகிறார் ஜான் பாண்டியன்?
மதுரை: தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் அரசியல் சக்தியாக விளங்கியவரும், பல்வேறு வழக்குகளில் சிக்கி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருமான ஜான் பாண்டியன், விரைவில் வெளியே வரப் போவதாகவும், முக்கிய அரசியல் கட்சி ஒன்றில் விரைவில் சேரவுள்ளதாகவும், அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஜாதி சங்கத்தின் தலைவராக அரசியல் களம் புகுந்த ஜான் பாண்டியன் ஒரு காலத்தில் அரசியல் சக்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தார். அதிமுகவுடன் கூட்டணியும் வைத்தார்.
சென்னை எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் இவரை நிற்க வைத்தார் ஜெயலலிதா. ஆள், அம்பாரி, பண பலத்துடன் அந்தத் தேர்தலில் உள்ளூர் பிரபலமான பரிதி இளம்வழுதியுடன் மோதினார் ஜான் பாண்டியன். தேர்தல் நாளன்று பெரும் வன்முறையும் மூண்டது. இறுதியில் வென்றவர் பரிதிதான்.
அதன் பின்னர் அரசியலில் தேய் பிறையாகி விட்டார் ஜான் பாண்டியன் இந்த நிலையில் கோவை பைனான்சியர் கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சேலம் சிறையில் கைதியாக காலம் தள்ளிக் கொண்டுள்ளார்.
ஆயுள் கைதியாக உள்ள ஜான் பாண்டியன் விரைவில் ஒரு முக்கிய கட்சியில் இணையப் போகிறாராம். இதுதொடர்பாக அந்தக் கட்சியின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவருடன் ஜான் பாண்டியன் தரப்பு பேசியுள்ளதாம். இந்தப் பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டும் விதமாக இருப்பதாகவும், ஜான் பாண்டியனே விரைவில் வெளியே வரக் கூடும் என்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
முக்கிய கட்சியில் இணைய ஜான் பாண்டியன் தரப்பு முன்பே முயன்றதாம். இதுதொடர்பாக சென்னையில் உள்ள முக்கிய தளபதியுடன் பேச்சுவார்த்தையும் நடந்து விட்டதாம். ஆனால் சென்னை தேர்தலில் சந்தித்த அனுபவங்களை மனதில் வைத்து அந்த முக்கிய புள்ளி, பேச்சுவார்த்தைக்குள் புகுந்து ஆட்டத்தைக் கலைத்து விட்டாராம்.
இதையடுத்து தற்போது மதுரை புள்ளியை அணுகியுள்ளது ஜான் பாண்டியன் தரப்பு. ஜான் பாண்டியன் தரப்புக்கு ஆறுதல் சொன்ன மதுரை புள்ளி, நம்பிக்கையோடு இருங்கள், விரைவில் சட்ட ரீதியாக வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளாராம்.
எப்படியும் ஏப்ரலுக்குள் அண்ணன் வெளியே வந்து விடுவார் என ஜான் பாண்டியன் தரப்பு படு நம்பிக்கையோடு இருக்கிறது.