ஓகேனக்கல்லில் இன்று தமிழக கட்சிகள் ஆர்ப்பாட்டம்-போலீஸ் குவிப்பு
ஓகேனக்கல்: ஒகேனக்கல் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் கன்னட அமைப்புகளை கண்டித்து இன்று ஓகேனக்கல்லில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியோடு தமிழக அரசு நிறைவேற்றவுள்ள ஓகேனக்கல் கூட்டுக் குடிநீ்ர் திட்டத்தைத் தடுக்க கர்நாடகம் தீவிரமாக முயன்று வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஓகேனக்கல் அருவிப் பகுதி கர்நாடகாவுக்கு சொந்தம் என்று திடீர் பிரச்சினையை அம் மாநிலத்தின் சில கன்னட அமைப்புகளும் பாஜகவும் கிளப்பி விட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஓட்டுகளை அள்ளும் முயற்சியாக சென்சிடிவான இந்த விவகாரத்தை பாஜக ஊதிவிட்டு வருகிறது.
கர்நாடக பாஜக தலைவரும் ஒரு வார முதல்வருமான எடியூரப்பா ஓகேனக்கல் பகுதிக்கே வந்து பிரச்சனையை தூண்டிவிட்டார்.
மேலும் கன்னட அமைப்பினர் ஓகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்து திடீர், திடீரென போராட்டங்கள் நடத்தி வருகின்றன்ர்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில் ஓகேனக்கல் விவகாரத்தை ஊதிவிட்டு தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு சமீபத்தில் கடிதம் எழுதியது. இந்த கடிதத்துக்கு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துவிட்டு பதில் தருவதாக அம் மாநில தலைமைச் செயலாளர் பதிலளித்துள்ளார்.
1955ம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கர்நாடகத்தின் எதிர்ப்பால் தான் கிடப்பில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஓகேனக்கல் பகுதியில் அத்துமீறி வரும் கன்னட அமைப்புகளை கண்டித்து பெண்ணாகரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
அதில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து ஓகேனக்கல்லில் அனைத்து கட்சிகள் சார்பில் இன்று (26ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ஓகேனக்கல்லில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கூட்டாற்று பகுதியில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓகேனக்கல் உரிமை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நஞ்சப்பன் தலைமை தாங்குகிறார்.
இதில் முக்கிய கட்சியினர் தவிர பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.
500க்கும் மேற்பட்ட ஓகேனக்கல் பரிசல் ஓட்டிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டாட்டத்தில் பங்கேற்க காலை முதலே தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெண்ணாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஓகேனக்கல் வந்து குவிந்து வருகின்றனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதம் நடைபெறாமல் டதுக்க பெண்ணாகரம் துணை எஸ்பி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications