ஆசிரியர் தாக்கியதில் எஸ்எஸ்எல்சி மாணவி பலி
டெல்லி: டெல்லியில் ஆசிரியர் தாக்கியதால் நினைவிழந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
டெல்லியின் கோண்ட்லி பகுதியில் உள்ளது தின்கர் மாடல் பள்ளி. இதில் 10ம் வகுப்பு படித்த மாணவி ரிங்கி. தன்னிடம் டியூஷன் கற்றுக் கொள்ள வரவில்லை என்ற கோபத்தில் ரிங்கியை அவளது வகுப்பாசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிங்கி நினைவிழந்தாள். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 2007ல் நடந்தது. உடனடியாக அருகில் இருந்த மகாராஜா ஆக்ராசென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள் ரிங்கி. கடந்த 4 மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டபோதும் 2 மாதங்களுக்கு முன்பு கோமா நிலையை அடைந்தாள் ரிங்கி.
இந்நிலையில் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் அவளது உயிர் நேற்று பிரிந்தது. சுவாசக்கோளாறு காரணமாக ரிங்கி இறந்ததாக கூறப்படுகிறது.
ரிங்கியை தாக்கிய வகுப்பாசிரியர் மீது அவளது தந்தை நரேஷ்குமார் ஏற்கெனவே புகார் கொடுத்தார். அதன்பேரி்ல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட டெல்லி கல்வித்துறை மந்திரி அரவிந்தர் சிங், மருத்துவமனைக்குச் சென்று ரிங்கியை பார்த்துள்ளார்.
டெல்லி கிழக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஆர்.என்.சர்மா விசாரித்து தாக்கல் செய்த அறி்க்கையின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு கடந்த பிப்ரவரி 20ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவி ரிங்கி உயிரிழந்ததால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.