தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்கின
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.
கடந்த வாரம் பிளஸ்டூ தேர்வுகள் முடிவடைந்தன. நேற்று முன்தினம் மெட்ரிகுலேஷன் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. இந்த நிலையில் இன்று பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின.
தமிழகம் மற்றும் புதுவையில் இந்தத் தேர்வுக்காக 2674 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 8 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்களை விட மாணவிகளே இதில் அதிகம். பிளஸ்டூவைப் போலவே பத்தாவது வகுப்புத் தேர்விலும் மாணவ, மாணவியர் கேள்வித்தாளை படித்துப் பார்க்க கூடுதலாக 10 நிமிட அவகாசம் தரப்படுகிறது.
தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் சிறார் சிறையில் உள்ள 8 சிறுவர்கள் இன்று பத்தாவது வகுப்பைத் தேர்வு எழுதுகின்றனர்.
ஏப்ரல் 10ம் தேதி பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைகின்றன.
ஆம்புலன்சில் வந்த மாணவி:
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி பவித்ரா ஹோலி பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் குடல்வால் நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந் நிலையில் இன்று அவர் ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுத வந்தார். அவரால் எழுத முடியாததால் அவர் கூறிய பதிலை ஆசிரியை ஒருவர் எழுதினார்.












Click it and Unblock the Notifications