பெங்களூரில் பாலியல் தொழிலாளர்கள் மாநாடு!
பெங்களூர்: பெங்களூரில் 2 நாள் அகில இந்திய பெண் பாலியல் தொழிலாளர்கள் வருடாந்திர மாநாடு இன்று தொடங்குகிறது.
பெண் பாலியல் தொழிலாளர்கள் குறித்த தவறான கண்ணோட்டத்தை போக்குவது மற்றும் அவர்களது மனித உரிமைகளை முறையாக பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பெங்களூர் அர்பன், பெங்களூர் ரூரல் மற்றும் ராம்நகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண் பாலியல் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து மாநாட்டை நடத்தும் பெங்களூரைச் சேர்ந்த சுரக்ஷா அமைப்பின் செயல் இயக்குநர் மேகி தாமஸ் கூறுகையில், மாநாட்டின் ஒரு பகுதியாக மார்ச் 29ம் தேதி பெண் பாலியல் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சம்வாதா என்ற பெயரில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதில் பல்வேறு சமூக சேவகர்கள் கலந்து கொண்டு விவாதிக்கவுள்ளனர் என்றார்.
1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு சுரக்ஷா. கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் ஊரக ஏழைகள், பெண்கள், குடிசைவாசிகள், வேறு பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிப்போர் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் நலன்களுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது.