தமிழர் விடுதலை படை மாறனுக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் மீது குண்டு வீசித் தாக்கிய வழக்கில் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன் உள்ளிட்ட 11 பேருக்கு தலா பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1993ம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையம் மீது குண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் பெரும் சேதமடைந்தது. தில்லை கோவிந்தராஜன் என்ற காவலர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன் (இவர் வீரப்பன் கும்பலுடன் இருந்தவர்) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சென்னை தடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மாறன் உள்ளிட்ட 11 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறையும், சுந்தரம் என்பவரைத் தவிர மற்ற 10 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ராமசாமி தீர்ப்பளித்தார்.
இந்த அபராதத் தொகையை வசூலித்து தில்லை கோவிந்தராஜனின் மனைவிக்கு இழப்பீடாக தர வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.