'இவர்' தமிழன்னையா?: திமுக தாக்கு-அதிமுக கூச்சல்
சென்னை: தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு குறைந்தபட்சம் நன்றி கூட சொல்லத் தெரியாதவர்களுக்கு (ஜெயலலிதா) எல்லாம் 'தமிழன்னை' என்று ஏன் பட்டம் சூட்டுகிறீர்கள் என அதிமுக உறுப்பினர்களை நோக்கி சட்டசபையில் திமுக எம்எல்ஏ முல்லைவேந்தன் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்
முல்லை வேந்தன் (திமுக): பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை; இது வெறும் பூஜ்யம் என்று கூறுகின்றனர். ராஜ்ஜியத்தை இழந்தவர்களுக்கு பூஜ்யமாகத் தான் தெரியும்.
நேற்று அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசும்போது, 'ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்; உள்ளே இருக்குதாம் ஈறும், பேனும்' என்று குறிப்பிட்டார். இங்கு யாருக்கும் கொண்டையும் கிடையாது; அதில் தாழம் பூவும் கிடையாது. ஈறும், பேனும் கிடையாது. அவர்களுக்குத் தான் ஒய்யாரக் கொண்டை போடலாம்; அதில் தாழம்பூவையும் வைத்துக் கொள்ளலாம். அதில் ஈறும், பேனும் குடியிருக்கலாம்.
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பதற்கு முதல்வர் கருணாநிதி தான் அரும்பாடு பட்டார். அவரது முயற்சியால் தான் தமிழ் செம்மொழியானது.
கலைராஜன் (அதிமுக): தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுகவும் குரல் கொடுத்திருக்கிறது. தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொல்காப்பியமே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. ப்படியிருக்கும்போது தமிழ் மொழியின் வரலாறு 1,500 ஆண்டுகள் என்று குறைவாக கால நிர்ணயம் செய்து செம்மொழி அந்தஸ்தை வாங்கியிருக்கிறீர்கள்.
முல்லை வேந்தன்: தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு குறைந்தபட்சம் நன்றி கூட சொல்லத் தெரியாதவர்களுக்கு (ஜெயலலிதா) 'தமிழன்னை' என்று ஏன் பட்டம் சூட்டுகிறீர்கள்?
(அப்போது அதிமுக உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்)
கலைராஜன் (அதிமுக): தமிழ் மொழிக்கு என்ன செய்தீர்கள் என்று எங்களைப் பார்த்து ஏளனமாக பேசுகிறீர்கள். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான், மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். அதேபோல், தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதா நடத்தினார். நீங்கள், ஒரு உலகத் தமிழ் மாநாடாவது நடத்தியதுண்டா?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: உலகத் தமிழ் மாநாட்டை முதன் முதலில் நடத்தியதே திமுக தான். மாநாட்டை யார் நடத்தினார்கள் என்பது பிரச்னையல்ல. தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது யாரால்? கருணாநிதி எடுத்த முயற்சியால் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்றார்.