எரையூரில் வன்னிய கிருஸ்துவர்களிடம் குறைகேட்பு
விழுப்புரம்: வன்னிய கிறிஸ்தவர்களின் மத மாற்ற மிரட்டலைத் தொடர்ந்து இன்று எரையூர் கிராமத்தில், அவர்களிடம் குறைகளைக் கேட்பதற்கு புதுவை - கடலூர் மறைமண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் எரையூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கும், வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தனி சர்ச், தனிப் பங்கு கோரி வருகின்றனர்.
இந்த மோதல் சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்தது. எங்களுக்கு தனிப் பங்கு தர வேண்டும், இல்லாவிட்டால், நாங்கள் 20 ஆயிரம் பேரும் ஒட்டுமொத்தமாக இந்து மதத்திற்கே மாறி விடுவோம் என வன்னிய கிறிஸ்தவர்கள் அறிவிப்பு விடவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த புதுச்சேரியிலிருந்து பாதிரியார்கள் குழு நேற்று எரையூர் வந்தது. இன்று வன்னிய கிறிஸ்தவர்களிடமும், அவர்களின் பிரதிநிதிகளிடமும் குறைகளை கேட்டறிய புதுச்சேரி - கடலூர் மறைமண்டல நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
எரையூரில் உள்ள செயின்ட் ரோசரி மேரி சர்ச்சில் இந்த குறை கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வன்னிய கிறிஸ்தவர்கள் தங்களது குறைகளைக் கூறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஊர்ப் பெரியவர்களையும் தனியாக சந்திக்க மறை மண்டல நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் பலியான இரு வன்னிய கிறிஸ்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 1லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வன்னிய கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications