மாடுகளை வழிப்பறி செய்ததாக மேனகா காந்தி மீது வழக்கு

பிராணிகள் நலத்தில் ஆர்வம் உடையவர் முன்னாள் மத்திய அமைச்சரும் சமாஜ்வாடி எம்.பி.யுமான மேனகா காந்தி. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் என்ற ஊருக்கு தனது உதவியாளர்கள் மனோஜ் குப்தா, அனூப் குப்தா, நரேஷ் ஆகியோருடன் மேனகா காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் பிசால்பூர் என்ற இடத்தில் எருமை மாடுகளை ஏற்றிவந்த ஒரு வேனை பார்த்ததும் விரட்டிச் சென்று அந்த வாகனத்தை மறித்து நிறுத்தினார்.
இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்கின்றார்களா என்று வேனில் இருந்தவர்களிடம் மேனகாவும் அவரது நண்பர்களும் கேட்டனர்.
அதற்கு, அந்த மாடுகளை லக்கிம்புர் என்ற இடத்தில் விலைக்கு வாங்கியதாகவும் பரேலியில் உள்ள சந்தையில் விற்பதற்கு கொண்டு செல்வதாகவும் வேனில் இருந்த வியாபாரிகள் கூறியுள்ளனர். மாடு வாங்கியதற்கான ரசீதையும் காண்பித்தனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாத மேனகாவும், அவரது உதவியாளர்களும் சேர்ந்து வேனில் இருந்த மாடுகளை இறக்கி பிசால்பூர் விவசாயிகளிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டனர். அவர்களும் மாட்டை ஓட்டிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து மாடுகளை பறிகொடுத்த வியாபாரிகள் மேனகா, அவரது உதவியாளர்கள் மீது பிசால்பூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் மேனகா மற்றும் 3 பேர் மீது வழிப்பறி மற்றும் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் உண்மை என்று அறியப்பட்டால் மேனகா மற்றும் உதவியாளர்களைக் கைது சிறையிலடைப்போம் என்று பிலிபிட் போலீஸ் எஸ்பி சுக்ரீவ் கிரி கூறினார்.












Click it and Unblock the Notifications