கோவிலில் குடியேறிய நாகம் - பக்தர்கள் பரவசம்
நெல்லை: நெல்லை மாவட்டம் சுரண்டே அருகே கோவிலுக்குள் வந்த நாகத்தைப் பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ளது சோலைசேரி கிராமம். இக்கிராமத்திலிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் குளத்தின் கரையை ஓட்டி சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் என்பவர் பூசாரியாக உள்ளார்.
சுமார் 6 அடி உயரமுள்ள மண்புற்றுக்கு நடுவே அம்மன்சிலை அமையப் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பூசாரி கோவிலுக்குள் காலை பூஜை செய்வதற்காக கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பூஜை செய்து விட்டு திரும்பியபோது சுமார் 8 அடி நீளமுள்ள நாகபாம்பு படமெடுத்தவாறு வாயில் கதவில் தொங்கி கொண்டிருந்துள்ளது.
அதனை கண்ட முருகன் பயந்து நடுங்கியவாறே சாமி சிலை முன்பு சுமார் 2 மணி நேரம் பூஜை செய்யவே நாகம் இடம் பெயர்ந்துள்ளது. அதன்பின்பு கோயிலுக்குள் நடந்த சம்பவத்தை கிராமத்தில் கூறவே கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்துள்ளனர். அதன்படியே மீண்டும் அதே நிலையில் நாகம் அம்மன் சிலை முன்பு தொங்கியவாறே இருந்துள்ளது.
இதனால் இரு தினங்களாக கோவிலுக்குள் சென்று கதவை திறந்தால் நாகம் சீறி வருவதால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லாமலும், பூஜை செய்ய முடியாமலும் இருந்து வருகின்றனர்.
மேலும் அதே ஊரில் ஒரு வெண்கல சிலை சுமார் அரை அடி உயரத்திற்கு அனாதையாக கிடந்துள்ளது. அதனை கோயிலுக்குள் கொண்டு சென்று பூஜை செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் இருந்த போதிலும் பழைமை வாய்ந்த கோயிலுக்குள் நாகம் தோன்றியுள்ளதும், புதிய அம்மன் சிலை கிடைத்துள்ளதாலும் அந்த ஊரில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர்.