சரப்ஜித் சிங்கை விடுவிக்கக் கோரி ஸ்கேட்டிங் செய்த 7 வயது சிறுமி!
புதுச்சேரி: பாகிஸ்தான் சிறையில் வாடும் சப்ரஜித் சிங்கை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியை சேர்ந்த சுருதி என்ற 7 வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் சுருதி (7). இவர் ஸ்கேட்டிங் மூலம் 200 கி.மீ தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்க திட்டமிட்டார்.
புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் செல்வது என்றும், மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பி வரும் வகையில் அவரது பயணம் அமைக்கப்பட்டது.
சுருதி தனது ஸ்கேட்டிங் பயணத்தை பத்துக்கண்ணு என்ற பகுதியில் இருந்து துவக்கினார். பின்பு தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.
சுருதிக்கு, ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பாகிஸ்தானில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சப்ரஜித் சிங்கை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரியும், லிம்கா சாதனைக்காகவும் இந்த ஸ்கேட்டிங் பயணம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.