காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்!
காரைக்குடி: காரைக்குடியில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடிக்கு வரும் 5 ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வருகையை முன்னிட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் காரைக்குடி காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு புகாரோடு ஒரு இளம் பெண் வந்தார். இன்ஸ்பெக்டரை பார்த்து புகார் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
சோனியா காந்தி வருகிறார். அதனால் அது குறித்த பாதுகாப்பு ஆலோசனையில் உள்ளோம். எனவே 5 ம் தேதிக்கு பிறகு வந்து மனு கொடுத்தால் அந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த பதிலில் திருப்தி அடையாத அந்த இளம் பெண் தான் கொண்டு வந்திருந்த மாத்திரைகளை வாயில் போட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அதை பெண் மாத்திரை சாப்பிடுவதை தடுத்து காப்பாற்றினர்.
பின்பு அந்த பெண்ணின் உறவினர்களை வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர். இதனால் காரைக்குடி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சோனியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிகாரிகள், சாதாரண பெண்ணின் பிரச்சினைக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமே.