மதுரை அருகே கோஷ்டி மோதல்-குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு
மதுரை: மதுரை அருகே இரு கிராம மக்களிடையே பெரும் கோஷ்டி மோதல் மூண்டது. இதில் ஒரு தரப்பு, துப்பாக்கிச் சூடு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் இறங்கியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள வண்டாரி பஞ்சாயத்தின் கீழ் மெய்யானூத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்தப் பஞ்சாயத்தின் தலைவராக வழக்கமாக அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் பொறுப்பு வகித்து வருகிறார்களாம். ஆனால் கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மெய்யானூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்று முதல் அணைக்கரைப்பட்டி கிராமத்துக்காரர்களுக்கும், மெய்யானூத்துப்பட்டி கிராமத்தினருக்கும் இடையே பூசல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 28ம் தேதி இரு கிராமத்தினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. இதையடுத்து போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இனிமேல் சண்டை போட மாட்டோம் என இரு தரப்பும் உறுதி கூறி விட்டுச் சென்றது.
ஆனால் நேற்று இரவு இரு கிராம மக்களுக்கும் இடையே திடீரென மோதல் மூண்டது. அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பறவைகளைச் சுடும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் உள்ளிட்டவற்றுடன் மெய்யானூத்துப்பட்டிக்குச் சென்றனர்.
அங்கு கிராமத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிளால் சுட்டனர். வெடிகுண்டுளையும் வீசினர். வைக்கோல் படப்புகளுக்குத் தீவைக்கப்பட்டது. குடிசை வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது.
மெய்யானூத்துப்பட்டி கிராம மக்கள் பதிலடி தருவதற்குத் தயாராவதற்குள் அணைக்கரைப்பட்டிகாரர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த திடீர் தாக்குதலில் ஈஸ்வரன் என்கிற 16 வயது பிளஸ்டூ மாணவன் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் கிராமத்திற்கு விரைந்தனர். பதில் தாக்குதலில் மெய்யானூத்துப்பட்டி கிராம மக்கள் இறங்கி விடாமல் இருக்க அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணைக்கரைப்பட்டியினர் வன்முறையில் இறங்கியுள்ளதால், போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் எனவும், அப்போதுதான் தன்னால் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை பார்க்க முடியும் என்றும் முனியம்மாள் கூறியுள்ளார்.