மாஜி மந்திரி முன் அதிமுக நிர்வாகிகள் 'டிஷ்யூம்'!
கரூர்:கரூரில் நடைபெற்ற அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
கரூரில் உள்ள சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் செம்மலை கலந்து கொண்டார்.
அப்போது, அரவாக்குறிச்சி தொகுதியில் இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை அமைப்பது தொடர்பாக கரூர் முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது-க்கும், அரவாக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லியாவுதீன் சேட்டிற்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக் கொண்டு அடிக்க பாய்ந்தனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்ததால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலையை மற்ற அதிமுக நிர்வாகிகள் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.