ஓகனேக்கல் திட்டத்துக்கு 98லேயே கர்நாடகம் ஒப்புதல்: தலைமைச் செயலர்
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 1998ம் ஆண்டே கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி திரிபாதி தெரிவிக்கையில், டெல்லியில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக 1998ம் ஆண்டு டெல்லியில் ஒரு கூட்டம் நடந்தது.
அதில், கர்நாடக அரசின் சார்பில் அப்போதையை தலைமைச் செயலாளர், பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத் தலைவர், தொழில்நுட்ப ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழு கலந்து கொண்டது.
தமிழகத்தின் சார்பில் அப்போதைய பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் குடிநீர்த் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு கர்நாடகமும் ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும். காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அளவு நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோம். கூடுதலாக ஒரு சொட்டு நீரைக் கூட கேட்கப் போவதில்லை.
கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மத்திய அரசு ஒரு ஆட்சேபனை இல்லை சான்றிதழை வெளியிட்டது. அதில், இத்திட்டத்திற்காக காவிரியிலிருந்து 1.4 டிஎம்சி தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான தண்ணீர் காவிரியின் இடது கரையில் உள்ள குத்தப்பாடி கிராமத்திலிருந்துதான் எடுக்கப்படும். இது முற்றிலும் தமிழகத்திற்குள் உள்ள பகுதியாகும்.
கர்நாடக வன்முறை தொடர்பாக கர்நாடக அரசுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம். நிலைமை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் திரிபாதி.












Click it and Unblock the Notifications