4ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னட வெறியர்களின் வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் நீண்ட கால கனவுத் திட்டம் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டம். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தடைபட்டு வந்த இந்தத் திட்டம், இப்போது காலம் கடந்து நிறைவேற்றப்பட இருக்கும் தருணத்தில், அதை தடுத்து நிறுத்தியே தீருவோம் என்று கர்நாடகத்தில் சில அரசியல்வாதிகளும் கன்னட மொழி வெறியர்களும் புறப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

பல்வேறு இனங்கள், மொழிகள் பேசுவோர் ஒருங்கிணைந்து வாழுகிற நாட்டில் அதன் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கும் குறுகிய இனவெறி அரசியல் கர்நாடகத்தில் அவ்வப்போது தலை தூக்குவது வாடிக்கையாகி விட்டது.

ஒரே நாட்டில் வாழ்கின்ற ஒரு இனத்தவர் மீது மற்றொரு இனத்தவர் பகை காட்டுகின்ற இந்த அரசியல் மற்ற எல்லா பயங்கரவாதங்களையும் விட மிகக் கொடியதாகும்.

கர்நாடகத்தில் இத்தகைய பயங்கரவாதத்தை அங்குள்ள தேசிய அரசியல் கட்சிகளே அவ்வப்போது தங்களது குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக கையில் எடுத்துக் கொள்வதும் அதனை தேசிய அரசியல் கட்சிகளின் தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதும் நாட்டிற்கும் அதன் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிப்பதாகும். ஓகனேக்கல் குடிநீர்த் திட்டம் கர்நாடக அரசின் ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள தண்ணீரை எந்தெந்த வழிகளில் மாநில மக்களின் நலனுக்காக பயன்படுத்துவது என்பது தமிழகத்தின் உரிமை. இந்த உரிமையை செயல்படுத்துவதில் கர்நாடகத்திற் கடுகளவு கூட பாதிப்பில்லை என்கிறபோது எடியூரப்பா போன்றவர்களின் தலையீட்டையும் கன்னட வெறியர்களின் போராட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் தாக்கப்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவரின் சிலையை திறந்து வைக்க முடியாமல் பல ஆண்டுகளாக தடுத்து வரும் கன்னட வெறியர்கள் இன்றைக்கு தமிழ்ச் சங்கத்தின் மீதும் ஆத்திரத்தைக் காட்டியுள்ளார்கள். தமிழ்த் திரைப்படங்களை திரையிடும் திரையரங்குகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன, தாக்கப்பட்டிருக்கின்றன. கன்னட வெறியர்களின் இத்தகைய அட்டூழியங்களை அடக்கி ஒடுக்காமல் கர்நாடக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான கன்னட வெறியர்களின் வெறுப்பையும், அதன் தொடர்ச்சியாக அங்கு தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கலவரத்தையும் கண்டிக்கும் வகையிலும், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டு வரும் மொழி வெறியர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களில் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+