சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து பேச கூடுதல் நேரம் தராததால், துணை சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று அதிமுக வெளிநடப்பு செய்தது.
சட்டசபையில் இன்று அதிமுக உறுப்பினரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் மின் பற்றாக்குறை குறித்துப் பேசினார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தெரிவித்து அமருமாறு கூறினார்.
ஆனால் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் எழுந்து விஸ்வநாதன் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை துணை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக மின்துறை மானியக் கோரிக்கை மீது நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், தமிழகத்தின் மின் திட்டங்கள் குறித்து திமுக அரசு தவறான தகவல்களை மக்களுக்குக் கொடுத்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் பல புதிய மின் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தற்போது தமிழகத்திற்கு, அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 லட்சம் டன் நிலக்கரிக்குப் பதிலாக, 25 சதவீதம் குறைநத அளவிலான நிலக்கரியையே மத்திய அரசு வழங்குகிறது. இதனால் பெரும் பணத்தை செலவு செய்து வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறது அரசு. இதனால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது.
இந்த விஷயத்தில், மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, முழு அளவில் நிலக்கரியை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றார்.












Click it and Unblock the Notifications