வெறிச்சோடிய பெங்களூர், மைசூர் பஸ்கள்-ரயில்கள்!
சென்னை: கர்நாடகத்தில் வன்முறை தொடருவதால் சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கன்னட அமைப்புகளை கண்டித்து தமிழக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் -போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகம் சார்பில் நாளை உண்ணாவிரதம் நடத்தப்படவுள்ளது. நாளை பாமக வும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஓகனேக்கல் பிரச்சினை தொடர்பாக பெங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களில் கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழக வாகனங்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டு தார் பூசி தமிழ் எழுத்துக்களை அழித்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் தொடரும் இந்த வன்முறையால் தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
சேலத்தில் இருந்து தினமும் சேலம் டிவிசன் மற்றும் தர்மபுரி டிவிசனை சேர்ந்த 100 பஸ்கள் பெங்களூர் செல்லும். இந்த பஸ்கள் அனைத்தும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 நிமிடங்களுக்கு ஒன்று புறப்பட்டு செல்கிறது.
சாதாரன கட்டண பஸ், அல்ரா டீலக்ஸ், நான் ஸ்டாப் பஸ் என்று 3 பிரிவு கட்டணங்களில் இந்த பஸ்கள் இயங்குகின்றன. எப்போதும் சேலம் பஸ் நிலையத்தில் பெங்களூர் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 3 நாட்களாக பஸ்சில் கூட்டம் இல்லை.
57 சீட்களை கொண்ட சாதாரண கட்டண பஸ்சில் தற்போது 25 சீட்கள் நிரம்புவதே அரிதாக உள்ளது. பஸ்சில் பெங்களூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
இதேபோல் சேலம் வழியாக பெங்களூர் செல்லும் ரெயில்களிலும் கூட்டம் குறைந்து உள்ளது. எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் -பெங்களூர் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி -மைசூர் எக்ஸ்பிரஸ் என அனைத்து ரெயில்களிலும் பயணிகள் குறைந்து விட்டார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால், மைசூருக்கு தினமும் 10 தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது இந்தப் பேருந்துகள் அனைத்தும் மாதேஸ்வரன்மலை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதேபோல சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பஸ்களிலும் கூட்டம் அடியோடு குறைந்து விட்டது.