ஓகேனக்கல் திட்டத்தை எதிர்த்த மனு-கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி
பெங்களூர்: ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கலான மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த சி.எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்ட 4 கவுன்சிலர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ஓகேனக்கல் எல்லை தொடர்பாக மத்திய அரசு உத்தரவின்படி இன்னும் கூட்டு சர்வே எடுத்து முடியவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால் கர்நாடக மாநிலத்துக்கு அநீதி ஏற்படும்.
எனவே, கூட்டு சர்வே எடுத்து முடியும் வரை ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப் முன்னிலையில் நேற்று நடந்தது. விசாரணையின்போது தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப்,
ஓகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம், இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் கோர்ட்டு தலையிட முடியாது. மேலும், இது சம்பந்தமாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஏற்கனவே எரிந்து கொண்டு இருக்கும் தீயில் நெய்யை ஊற்றி மேலும் தூண்டுவதற்கு இந்த கோர்ட்டு விரும்பவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி மனுதாரர்கள் கர்நாடக அரசை அணுகலாம். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.
இந்த நிலையில் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications