ஓகேனக்கல்: ஏப். 15ல் சிபிஐ ஆதரவு பந்த்
தர்மபுரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 15ம் தேதி ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. மாவட்ட செயலாளர் இளம்பரிதி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நாகராஜ ரெட்டி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
மத்திய அரசின் ஆதரவோடு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. குடிநீரில் புளோரைடு, நைட்ரேட் போன்ற நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை காப்பாற்றுவதற்கு 25 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இந்த திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆதாயத்துக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் இனவெறியை தூண்டி விடுகின்றன. இது தமிழர்-கன்னடர் இன மோதலாக மாறி உள்ளது. இதனால் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
ஓகேனக்கல் திட்டத்தை தடுக்கவும், தாமதப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. இப்போக்கை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உரிமையை பாதுகாக்கவும், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும் மாநில அரசுக்கு பொறுப்பு உள்ளது. இதில் மத்திய அரசின் மவுனம் கண்டிக்கத்தக்கது.
எனவே தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 15ம் தேதி ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.