இலங்கையில் குண்டுவெடிப்பு - அமைச்சர் உள்பட 12 பேர் பலி
இலங்கையின், கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியா என்ற இடத்தில் இன்று காலை இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
வெலிவேரியா நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வந்தபோது ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வெலிவெரியாவில் உள்ள விளயாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த மாரத்தான் ஓட்டப் போட்டியை தொடங்கி வைக்க ஜெயராஜ் வந்தார். அப்போது அங்கிருந்த தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் திடீரென தனது உடலில் கட்டியிலிருந்து குண்டை வெடிக்கச் செய்தார். அவர் விளையாட்டு வீரர் போல களத்தில் நின்றிருந்தார்.
அமைச்சர் ஜெயராஜ் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும் முன்பு வீரர்களுக்குக் கை குலுக்கினார். அப்போதுதான் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது.
இந்த பயங்கர சம்பவத்தில் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். தாக்குதலில் 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான காயங்களுக்குள்ளானோர் கம்பகா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கை அரசின் சார்பில் சென்ற குழுவில் ஜெயராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு அருகே தசநாயகே என்ற அமைச்சர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் 2வது அமைச்சராக ஜெயராஜ் கொல்லப்பட்டுள்ளார்.