கோடை ஓய்வுக்கு கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த ஆண்டு கோடை விடுமுறையை கொட நாடு எஸ்டேட்டில் கழிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஏதாவது கோடை வாசஸ்தலம் ஒன்றுக்கு சென்று கோடை விடுமுறைய கழிப்பது ஜெயலலிதாவின் வழக்கம். கடந்த ஆண்டு அவர் கொடநாடு எஸ்டேட்டில் 3 வார காலம் ஓய்வெடுத்தார். இந்த முறையும் அங்கேயே செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது தமிழக சட்டசபையில் பல்வேறு துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் எதிலுமே ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் இறுதியிலும் கூட ஜெயலிதாவுக்குப் பதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வம்தான் பேசினார்.
முதல்வர் கருணாநிதியின் வசம் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர் ஓய்வுக்கு கொட நாடு செல்லக் கூடும் என்று தெரிகிறது.