For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகனேக்கல்: கருணாநிதி துரோகம் செய்து விட்டார் - டி.ராஜேந்தர்

By Staff
Google Oneindia Tamil News

T.Rajendar
சென்னை: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட விவகாரத்தில் கர்நாடகத்திற்குப் பணிந்து போய், தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி பெரும் துரோகம் இழைத்து விட்டார் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், 1998ம் ஆண்டிலேயே கர்நாடகத்திலிருந்த மாநில அரசும் ஒத்துக் கொண்டு மத்திய அரசும் ஒப்புதல் தந்த பிறகு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் முழு உரிமையும் நம் கையில் இருக்கும்போது இப்போது திட்டத்தை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் என்ன? திடீரென்று நிறுத்தி வைக்கும் ரகசியம் தான் என்ன?

இந்த விவகாரத்தில் கர்நாடகம் பற்றி எரியும் போது அங்கே தேர்தலை அமைதியாக நடத்த முடியாது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்காமல் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஜெயிக்க முடியாது என்பதற்காக காங்கிரசும், கருணாநிதியும் கூட்டாக போடுகிறார்கள் ஒரு திட்டம். அதனால் தான் நிறுத்தி வைக்கப்படுகிறது கூட்டுக்குடிநீர் திட்டம்.

கர்நாடக தேர்தலுக்காக நாம் ஏன் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்? அதற்கு பதிலாக கர்நாடகத்தில் அமைதி இல்லை என்றால் அங்கே தேர்தலையை தள்ளி வைக்கட்டுமே.

நம் வீட்டு குழந்தை பசியிலே அழும் போது அதைவிட்டு விட்டு பக்கத்து வீட்டுக்காரன் குழந்தைக்கு தொட்டில் ஆட்டும் மாயம் தான் என்ன? துணை போகும் மர்மம் தான் என்ன?

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஜெயித்துவிடும்; அவர்கள் ஆதரவோடு இங்கே திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்று கருணாநிதி போடுகிறார் ஒரு தப்பு கணக்கு. மாறாக, பாரதிய ஜனதா ஜெயித்துவிட்டால் என்ன செய்வார்? இப்போதாவது எடியூரப்பா ஒகேனக்கல் எல்லை வரை தான் வந்தார். ஜெயித்து விட்டால் கோபாலபுரம் கொல்லை வரை அல்லவா வர நினைப்பார். தமிழர்களுக்கு தொல்லை அல்லவா தர துடிப்பார்.

அரசுமில்லை, அதிகாரமுமில்லை என பல்லில்லாத பாம்பாக இருக்கும் போதே கர்நாடகத்தினர் கரும் பாம்பாக கொத்த வருகிறார்கள். தேர்தல் முடிந்து ஜெயித்துவிட்டால் பல்லும் முளைத்துவிடும், விஷமும் கிடைத்து விடும். அப்புறம் அவர்களிடத்தில் கக்க சொன்னால் விஷத்தை தான் கக்குவார்கள். திட்டத்தை நிறைவேற்ற ரத்தினத்தையா கக்குவார்கள்?

தும்பைவிட்டு விட்டு வாலை பிடிக்கலாமா? நம் தெம்பை விட்டு விட்டு தேர்தலுக்கு பின் கர்நாடகத்தினர் காலை பிடிக்கலாமா? கர்நாடகத்தில் தேர்தல் வரவிருப்பது தமிழக முதல்வருக்கு முன்பே தெரியாதா?

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஏன் நாட்டினார் அடிக்கல்? அதனால் தானே கர்நாடகத்தினர் போட நினைத்தனர் தடைக்கல். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு தமிழர்கள் மீது எறிந்தனர் கருங்கல். அடிவாங்கிய தமிழன் திரும்ப அடித்தானே இது மைல்கல். ஆனால் இப்போது ஏன் கருணாநிதிக்கு வந்தது இந்த சறுக்கல்?

திட்டத்தை தடுத்தவனை புத்திசாலியாக்கிவிட்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்தவனை முட்டாளாக்கி விட்டாரே. அங்கே தமிழனை அடித்தவனை வீரனாக்கி விட்டு பதிலுக்கு போராட வாளெடுத்தவனை கோழையாக்கிவிட்டரே, இது நியாயமா? என்றார் ராஜேந்தர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X