திடீரென வீட்டை இடித்த உரிமையாளர்-2 பேர் படுகாயம்
சென்னை: சென்னையில் முன்னறிவிப்பின்றி வீட்டை உரிமையாளர் இடித்ததால் அதில் குடியிருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராயுபரத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமாக 2 மாடிகளைக் கொண்ட வீடு உள்ளது. இங்கு மொத்தம் 19 வீடுகள் உள்ளன. இந்த வீட்டு வளாகம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த நிலையில் வீடுகளை இடித்து புதுப்பித்துக் கட்ட செல்வம் முடிவு செய்தார். ஆனால் வீட்டில் குடித்தனம் இருப்பவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் இன்று காலை இடிப்புப் பணியைத் தொடங்கினார்.
வீட்டை இடித்தபோது, பால்கனி இடிந்து பயங்கர சப்தத்துடன் விழுந்தது. இதில் சிக்கி சிறுவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
வீடுகளின் இடிபாடுகளில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பத்திரமாக மீட்டனர்.
வீடு இடிக்கப்படுவதை அறிந்து வீடுகளில் குடியிருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
போலீஸாருக்கும் தகவல் பறந்து அவர்கள் விரைந்து வந்தனர். குடித்தனக்காரர்களை வெளியேற்றாமல் வீடுகளை இடித்ததற்காக செல்வத்தை போலீஸார் கண்டித்தனர்.