தெரியாதது போல பேசும் ராமதாஸ்- கனிமொழி தாக்கு
விழுப்புரத்தில் நடந்த தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் கனிமொழி பேசுகையில்,
ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் பற்றிய எல்லா விவரங்களும் நமது கூட்டணியில் உள்ள கட்சியின் (பாமக) நிறுவன தலைவருக்கு தெரியும். எல்லாம் தெரிந்திருந்தும் 1998ல் இருந்து 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எந்த நோக்கத்தில் அவர் இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.
இந்த குடிநீர் திட்டம் குறித்து ஜப்பானுடன் ஒப்பந்தம் போடப்பட்டவுடன் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் உலக நாடுகள் நம்மைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டன.
எந்த நாட்டில் இருந்தும் நிதி உதவி கிடைக்கவில்லை. ஒவ்வொரு கதவாக திறக்கப்பட்டு இப்போது தான் இத்திட்டத்தை செயல்படுத்த வழி ஏற்பட்டுள்ளது.
இவை எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் கூட்டணி கட்சித் தலைவரே குறை கூறுகிறார்.
கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி ஏற்றவுடன், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி அவர்களிடம் பேசி இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
அப்போது மீண்டும் பிரச்சினை எழுந்தால் நமது சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு விதத்தில் தான் அரசியல் நடத்த முடியும். ஒன்று முதல்வர் கருணாநிதியை சார்ந்து செல்வது. மற்றொன்று எதிர்ப்பது.
வேறு விதத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதால், ஜெயலலிதா எதற்கெடுத்தாலும் அரசை எதிர்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்றார்.