மராத்தியில் 'வேண்டிய' அமிதாப்!
மும்பை: மராத்தியும், மகாராஷ்டிராவும் எனது இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளன என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதை மராத்தி மொழியிலேயே அவர் கூறியுள்ளார்.
மராத்திக்கும், மராத்திய கலாச்சாரத்திற்கும், மகாராஷ்டிராவுக்கும் அமிதாப் பச்சன் ஒன்றுமே செய்யவில்லை என்று சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் அங்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றை ஆப் ஆக்கும் வகையில் மராத்தியில் பேட்டி கொடுத்து வாயடைக்கச் செய்துள்ளார் அமிதாப் பச்சன்.
மகாராஷ்டிர டிவி ஒன்றுக்கு மராத்தியில் அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில், எனக்கு மகாராஷ்டிரா நல்ல வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. வீட்டைக் கொடுத்துள்ளது, நல்ல மனைவியைக் கொடுத்துள்ளது. எனக்கும் மகாராஷ்டிராவுக்குமான நட்பு 40 ஆண்டுகளுக்கும் மேலானது.
எனது தந்தைக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். இலக்கியத்தில் அவருக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவரது பல கவிதைகள், மராத்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
மராத்தி மொழிக்கும், அதன் கலாச்சாரத்திற்கும், மகாராஷ்டிராவுக்கும், அதன் மக்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அமிதாப்.