ராமநவமி-அயோத்தியில் பலத்த பாதுகாப்பு
அயோத்தி: ராம நவமியை முன்னிட்டு அயோத்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சித்திரை மாதத்தில் ராமர் அவதரித்த நாள் 'ராம நவமியாக' கொண்டாடப்படுகிறது. வரும் 14ம் தேதியன்று ராமநவமி என்பதால் அயோத்தியில் இப்போதே பண்டிகை பரபரப்பு துவங்கிவிட்டது.
8 நாட்களுக்கு நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் தீவிர பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தி எஸ்பி கோபேஷ்நாத் கன்னா தெரிவிக்கையில்,
அயோத்தியை 6 மண்டலங்களாகவும் 28 பிரிவுகளாகவும் பிரித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ராம ஜென்மபூமி வளாகம், ஹனுமான் கார்கி, நாகேஸ்வரநாத், கனகபவன் ஆகிய கோயில்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் தயார் நிலையில் உள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. சரயு நதிக்கரையில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14ம் தேதியுடன் முடிவடையும் இந்த விழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது என்றார்.