சட்டசபைக்கு வந்தார் ஜெ.-வெளிநடப்பு

இன்று காலை சட்டசபை கூடியதும் சட்டசபைக்கு ஜெயலலிதா வருகை தந்தார். அவரை ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் திரளாக கூடி வரவேற்று அழைத்துச் சென்றனர்.
உள்ளே சென்றும் ஜெயலலிதா ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எழுப்பினார். அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதையடுத்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது கூறுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக மக்களின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். காமராஜர் ஆட்சிக்காலத்திலும், பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும், பிறகு எனது ஆட்சிக்காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.
கடந்த 27ம் தேதி சட்டசபையில் இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல்வர் கருணாநிதி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அமைச்சரவையைக் கூட்டாமலேயே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டாமல், தன்னிச்சையாக இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.
கர்நாடக தேர்தலுக்கும், ஓகனேக்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இப்படிப்பட்ட முடிவை எடுத்ததற்காக முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications