கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி - விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் கட்சித் தலைமை அலுவலகத்தில் பணம் கட்டி விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மே மாதத்தில் கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுகவுக்கு 3 சீட் வரை பாஜக ஒதுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென ஓகனேக்கல் விவகாரம் எடியூரப்பாவால் விஸ்வரூபம் எடுத்ததால் அதிமுகவின் நிலை சிக்கலாகி விட்டது. இந்த சமயத்தில், எடியூரப்பாவுடன் கூட்டணி சேர்ந்தால் அது தமிழகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிமுகவினர் கருதினர்.
இரு தலைக் கொள்ளியாக அதிமுகவின் நிலை இப்படி இருந்த நிலையில், பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பான விண்ணப்பங்களை ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10, 16, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்களிடம் இருந்து விண்ணப்பப் படிவங்கள் பெறப்படும்.
தலைமைக் கழகத்தில், வருகின்ற 9ம் தேதி புதன்கிழமை மற்றும் 10ம் தேதி வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் அளிக்கலாம்.
தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் உரிய விண்ணப்பப் படிவங்களை மட்டுமே பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் அதிமுகவினர் கட்டணத் தொகையான 5 ஆயிரம் ரூபாயை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக தலைமைக் கழகத்தின் சார்பில் கட்சியின் பொருளாளர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications