காதலன் தூக்குப் போட்டு தற்கொலை-காதலி தீக்குளித்து சாவு!
புதுச்சேரி: காதலனின் மறைவுத் துயரை தாங்க முடியாத இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி அருகே வில்லியனூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
வில்லியனூர் கன்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ராஜேஸ்வரியும் காதலித்து வந்தனர்.
இது ராஜலிங்கத்தின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. ராஜேஸ்வரி வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறி காதலுக்குத் தடை விதித்தனர். இதனால் மனம் உடைந்த ராஜலிங்கம் 2 நாட்களுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல்தகனம் செய்யப்பட்டது.
ராஜலிங்கம் இறந்தது முதல் ராஜேஸ்வரி பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தார். நேற்று ராஜலிங்கம் வீட்டுக்குச் சென்று அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் ராஜலிங்கத்தின் நினைவை மறக்க முடியாமல் வீட்டில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் ராஜேஸ்வரி.