தமிழகம்-கர்நாடகா பஸ் போக்குவரத்து துவங்கியது
ஓசூர்: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்பினர் தமிழக எல்லைக்குள் அத்துமீறி, கடந்த ஒரு மாதமாக போரட்டங்கள் நடத்தினர்.
தமிழகத்திலும் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், கர்நாடகா-தமிழக எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தமிழக பஸ் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
இதைக் கண்டித்து ஓசூரில் கர்நாடக பஸ் தீவைத்து எரிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் ஏற்பட்ட பதற்றத்தினால் கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு அரசு பஸ்களை கர்நாடக போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர்.
சனி, ஞாயிறு, திங்கள்கிழமை யுகாதி என விடுமுறைக்குச் சென்ற தமிழக சாப்ட்வேர் ஊழியர்கள் பெங்களூருக்குத் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.
இந்தநிலையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பணியை கர்நாடக தேர்தல் முடியும் வரை ஒத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பதற்றம் குறைத் தொடங்கியது. கன்னட அமைப்புகளும் அடக்கி வாசிக்கத் தொடங்கின.
இரு மாநிலங்களிலும் இயல்பு நிலை திரும்பியது.
இதையடுத்து இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். முதற்கட்டமாக, சரக்கு லாரிகள் இயக்கப்பட்டன.
அரசு பஸ்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக, இரு மாநில போலீசாரும் உத்தரவாதம் கொடுத்ததால், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் மூன்று அரசு பஸ்களை தமிழக போலீசார் ஓசூரில் இருந்து பெங்களூரு வரை இன்று அனுப்பி வைத்தனர்.
அந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு, ஓசூர் பஸ்நிலையத்துக்கு பத்திரமாகத் திரும்பி வந்தன. இதையடுத்து, இரு மாநிலங்கள் இடையே அரசு, தனியார் விரைவு பஸ்கள், டவுன் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications