விமானியுடன் மோதல்-இறக்கி விடப்பட்ட கேரள எம்.பி
திருவனந்தபுரம்: பைலட்டுடன் ஏற்பட்ட மோதலில் கேரள எம்பி அப்துல் வகாப், தனது மனைவியுடன் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள முஸ்லிம் லீக் எம்பியான பி.வி.அப்துல் வகாப் விமான போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
கோழிக்கோட்டில் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு தனது மனைவியுடன் தாமதமாக சென்றார்.
அவருக்காக, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவது 15 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விமான பைலட் ரஜத் ரானா, இது தொடர்பாக விமான நிலைய மேலாளரை விமானத்திற்கு அழைத்து விசாரித்தார்.
அப்போது அப்துல் வகாபும் அவரது மனைவியும் விமான நிலைய மேலாளருடன் சேர்ந்து விமானத்துக்குள் ஏறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பைலட் ரஜத் ரானாவுக்கும், அப்துல் வகாப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கோபமடைந்த பைலட், அப்துல் வகாப்பை இறக்கி விடவில்லை என்றால் விமானத்தை கிளப்ப மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து அப்துல் வகாப்பும், அவரது மனைவியும் விமானத்தை விட்டு கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் பைலட் ரஜத் ரானா கோழிக்கோட்டிலிருந்து விமானத்தை கிளப்பினார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்பப் போவதாகவும், பைலட் மீது உரிமை பிரச்சனை கொண்டு வரப் போவதாகவும் வகாப் கூறியுள்ளார்.
பைலட் ரஜத் ரானா கூறுகையில், எம்பியை விமானத்திலிருந்து இறக்கிவிடுவது தொடர்பாக நான் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவர் விமானிகளின் காக்பிட் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் தான், பயணிகளின் நலன் கருதி அவரை இறக்கி விட்டேன் என்றார்.
இதுதொடர்பாக, சம்பவத்தின்போது விமானத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவிலேயே மிகப் பணக்கார எம்பி வகாப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications