இலங்கையில் பிரபாகரன் பிறந்த வீட்டுக்கு சிங்கள ராணுவம் காவல்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு, இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை கடலோர கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்துதான் தனி ஈழப் போராட்டத்தை பிரபாகரன் தொடங்கினார்.
சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு பயந்து பெரும்பாலான மக்கள் இந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவிட்டனர். பிரபாகரன் உறவினர்கள் உள்ளிட்ட சில குடும்பங்கள் மட்டுமே அங்கு தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
பிரபாகரனின் வீடு உள்பட வல்வெட்டித்துறை பகுதி முழுவதும் இப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்த வீடு உள்பட தமிழர்களின் அடையாளங்களாகக் கருதப்படும் எல்லா இடங்களையும் இலங்கை ராணுவத்தினர் அழித்து வருவதாகவும், இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை முற்றிலும் அழித்தொழிக்க முயற்சிப்பதாகவும் கடந்த மாதம் பிரபாகரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் இலங்கை ராணுவத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"பிரபாகரன் வாழ்ந்த வீட்டை அழிக்கும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை. இந்தப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்ததில் இருந்து அவரது வீட்டை எந்த சேதமும் ஏற்படாதவண்ணம் பாதுகாத்து வருகிறோம்.
புலிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வீட்டை சேதப்படுத்த முயற்சிக்கலாம் என்பதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். யாராலும் சேதப்படுத்த முடியாத அளவுக்கு பிரபாகரனின் வீடு பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது" என்றார்.