ஓகனேக்கல்: சரத் கட்சி 15ம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் போக்கைக் கண்டித்து ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 1998ம் ஆண்டு, ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பெங்களூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை அந்தந்த மாநிலங்கள் நிறைவேற்றிக் கொள்வது என்று இரு மாநில அரசுகளும், மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதையடுத்து உடனடியாக பெங்களூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு பெங்களூர் மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
ஆனால் திமுக அரசும், அதன் பின்னர் வந்த அதிமுக அரசும் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டன. திமுக இப்போது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர்தான் பிரச்சினை உருவானது.
அண்டை மாநிலங்கள் தமிழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினாலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை எதிர்த்தாலும், எரித்தாலும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
கர்நாடகத்தில் புதிய ஆட்சி உருவாகும் நிலையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உள்ளதா. முதலில் புதிய அரசு வரட்டும் என்பார்கள். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது, புதிய மத்திய அரசு வந்தவுடன் பேசலாம் என்பார்கள். பின்னர் நதி நீர் ஆணையம் தலையிட்டு பேசும் என்பார்கள். சிலர் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவார்கள். நியாயத்தின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு கிடைத்தாலும் அதை எதிர்ப்பார்கள். மொத்தத்தில் இந்தப் பிரச்சினையில் ஏமாறப் போவது தமிழக மக்கள்தான்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் செய்யும் தமிழக அரசையும், தமிழக மக்களையும், உரிமையையும் கேலிப் பொருளாக்கி வரும் மத்திய அரசையும், தமிழக மக்களின் உரிமையை தொடர்ந்து தடுத்து வரும் கர்நாடக அரசியல் தலைவர்களையும், கன்னட அமைப்புகளையும் கண்டித்து வருகிற 15ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இத்திட்டம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தூத்துக்குடியில் 16ம் தேதி நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.