For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் மாவட்டங்களில் பல மணி நேரம் கன மழை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:சிறிய இடைவெளிக்குப் பின்னர் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்துள்ளது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் பல மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது.

வழக்கமாக கோடை காலத்தில் அடை மழை பெய்யாது என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு ஏறுக்கு மாறாக, வெயில் ஒருபக்கம் அடித்து வெளுத்துக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் மழையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் தென் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வட மாவட்டங்களிலும் மழைக்குத் தப்பவில்லை.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தென் மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.

மதுரையில், பிற்பகல் ஒரு மணி நேரம் கன மழை விளாசித் தள்ளியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் என ஓடியது.

நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் கன மழை பெய்தது. விக்கிரமசிங்கபுரம், பணகுடி, களக்காடு, சேரன்மாதேவி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது.

குற்றாலம் அருவிகளிலும் சீசன் காலத்தில் வருவதைப் போல தண்ணீர் கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மழை கொட்டித் தீர்த்தது.

ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்புதான் கோடை காலத்தில் இப்படி கன மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் இப்படி கன மழை பெய்துள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரியில் மின்னல் தாக்கி 2 பேர் சாவு:

கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்து வந்த அடைமழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை கொட்டி வருகிறது. திடீரென மேகமூட்டம் திரண்டு இடிமின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நாகர்கோவில் ரோடுகளில் வெள்ளம் பாய்ந்து தண்ணீர் தேங்கியது.

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீகண்டசாஸ்தா கோயில், அழகம்மன் கோயில் பாதுகாப்பு அறையின் கூரை மழையால் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திடீர் மழையால் குலசேகரம் பகுதியில் பல இடங்களில் மின்னல் தாக்கியது. குலசேகரம் நாகக்கோடு அம்பலத்து விளை என்ற இடத்தை சேர்ந்த ஏசுராஜன் மாலை டிவி பார்ப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது தீடீரென மின்னல் தாக்கியதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

குலசேகரத்தை அடுத்த கரும்பாலிவிளையை சேர்ந்த நாகேந்திரன் என்ற கூலி தொழிலாளியும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மின்னல் தாக்கியதால் நாகக்கோடு அம்பலத்துவிளையைச் சேர்ந்த அனிதா, ஆசிர்வாதம், சஜிலா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X