உண்ணாவிரதம்: வராத நடிகர், நடிகைகளுக்கு நோட்டீஸ்!

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகத்தைக் கண்டித்து சென்னையில் கடந்த 4ம் தேதி பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் திரையுலகினர் நடத்தினர்.
இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என திரையுலகின் அனைத்து சங்கங்களும் அறிவித்திருந்தன.
ஆனால், பல்வேறு கலைஞர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க நேற்று திரையுலகினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ரஜினிகாந்த்துக்கு பெங்களூரில் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும், அவரவர் சங்கத்தின் சார்பில் தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது,
15 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் தருவது. விளக்க கடிதம் பெற்றவுடன் அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.
- கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர் ரஜினிகாந்த் படங்களுக்கு தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதைத் தவிர்க்க கர்நாடக திரை அமைப்புகளுடன் கலந்து பேசி சுமூகமான முடிவினை எடுப்பது
- எதிர்காலத்தில் தமிழ்த் திரையுலகமும், கன்னடத் திரையுலகமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கேஆர்ஜி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் சிம்பு, முரளி, நடிகைகள் மும்தாஜ், விந்தியா, இயக்குநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி சார்பில் உமா சங்கர்பாபு, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் சார்பில் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வந்த நடிகை மும்தாஜ் கூறுகையில், உண்ணாவிரதம் நடந்த நாளன்று நான் உடல் நல சோதனைக்காக மும்பை செல்ல வேண்டியிருந்தது. நீண்ட முயற்சிக்குப் பின்னர் எனக்கு டாக்டர்களைச் சந்திக்க நேரம் கிடைத்ததால் என்னால் உண்ணாவிரதத்திற்கு வர முடியவில்லை. இதுகுறித்து எனது சங்கத் தலைவரிடம் விளக்கி கடிதம் கொடுத்துள்ளேன் என்றார் மும்தாஜ்.
யார் யாருக்கு 'ஓலை'?:
இதற்கிடையே, யார் யாருக்கு விளக்க ம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல பெரும் தலைகள் இடம் பெற்றுள்ளதால் திரையுலகில் இந்த விளக்க நோட்டீஸ் விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகர்களைப் பொறுத்தவரை கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் வரவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.
கார்த்திக் என்ன விளக்கம் தரப் போகிறார் என்று தெரியவில்லை. நெப்போலியன் முன்கூட்டியே திட்டமிட்ட வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாக விளக்கியுள்ளாராம்.
பழம்பெறும் நடிகர்களான நம்பியார், நாகேஷ், எம்.என்.ராஜம் உள்ளிட்டோர் தங்களது வயது காரணமாக வர முடியவில்லை என்று கூறி நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனராம். எனவே இவர்களைப் போன்றவர்களுக்கு நோட்டீஸ் போகாது என்று தெரிகிறது.
நடிகைகளைப் பொறுத்தவரை மீனா, கோபிகா, ஆசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், மும்தாஜ் உள்ளிட்டோர் வரவில்லை. இவர்களில் கோபிகா கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். எனவே நோட்டீஸால் அவர் கவலைப்படப் போவதில்லை. ஆசினும் மும்பைக்குப் போய் விட்டார். மீராவுக்கும் நோட்டீஸால் பெரும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மும்தாஜ் விளக்கம் சொல்லி விட்டார். மீனாவுக்குத்தான் சிக்கல்.
பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, திப்பு, மனோ, சுஜாதா, கார்த்திக், சீனிவாஸ், ஹரிணி உள்பட பலர் வரவில்லை. இவர்களிடமும் விளக்கம் கேட்கப்படுகிறது.
முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ் என யாருமே வரவில்லை. இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குச்சாமி உள்ளிட்டோரும் வரவில்லை.
மொத்ததமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்திற்கு வரவில்லை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தனை பேருக்கும் கடிதம் அனுப்பி விளக்கம் வந்த பிறகு நடவடிக்ைக குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையால் திரையுலகில் பிளவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் திரையுலகில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications