வெடிகுண்டு மூலப் பொருள் பறிமுதல்-அகதி கைது
மதுரை: மதுரை அருகே விடுதலைப் புலிகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கேன் வெடிபொருள் தயாரிப்புக்கான மூல வேதிப் பொருளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட வேதிப் பொருளைக் கொண்டு பயங்கர நாசத்தை விளைவிக்கும் வெடிபொருட்களைத் தயாரிக்க முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தங்கியிருந்தவர் நவநீத கிருஷ்ணன் (33). இவர் இலங்கை அகதி ஆவார்.
இவர் சில ஆபத்தான பொருட்களை இலங்கைக்கு கடத்த முயல்வதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நவநீத கிருஷ்ணனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது வெடிபொருட்களைத் தயாரிக்கும் மூல வேதிப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை ஒத்துக் கொண்டார். இவற்றை இன்னொரு அகதியான ராஜன் என்பவர் தன்னிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், தான் இலங்கைக்கு அவற்றைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் ராஜன் தெரிவித்ததாக நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையடுத்து 16 கேன்களில் இருந்த வேதிப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். நவநீத கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்த வேதிப் பொருளைக் கொண்டு பயங்கர நாசத்தை விளைவிக்கும் வெடிபொருட்களைத் தயாரிக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அது என்ன வகையான வேதிப் பொருள் என்பது தெரியவில்லை. சோதனைக்கு அதை அனுப்பி வைத்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள ராஜனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.