1000 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது
சங்கரன்கோவில்: நெல்லை அருகே ஆயிரம் ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், புளியங்குடி ஆகிய பகுதிகளில் கள்ள நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சங்கரன்கோவில் பஜாரில் ஒரு கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த கடைக்கு விரைந்து சென்ற போலீசார் புகார் தெரிவிக்கப்பட்ட 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களை சோதனையிட்டதில் கைப்பையில் மறைத்து வைத்திருந்த கள்ளநோட்டுகளை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் செங்கோட்டை அருகே பண்பொழியை சேர்ந்த ஜான், திருவேங்கடத்தை சேர்ந்த அசன் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 43,000 ரூபாய் மதிப்பிலான 1000 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டு அச்சடித்து தரும் கேரள கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.