சென்னை மயானங்களில் இன்று முதல் இலவச தகனம்!
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மயானங்களில் இன்று முதல் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 38 மயானங்கள் உள்ளன.
இங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு ரூ. 250, தகனம் செய்வதற்கு ரூ. 650 (விறகு, வறட்டிக்கு தனி கட்டணம்), மின்சார மயானத்தில் தகனம் செய்ய ரூ. 250 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த கட்டணம் வசூலிப்பதில் மயான பொறுப்பாளர்கள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அதிக கட்டணம் கேட்டு இறந்தவர்களின் உறவினர்களை நிர்ப்பந்திப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், இனிமேல் மாநகராட்சி மயானங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மேயர் மா.சுப்ரமணியம் அறிவித்தார்.
இன்று முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இந்த புதிய முறையை இன்று மேயர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து மா.சுப்ரமணியம் கூறுகையில், மாநகராட்சிக்குச் சொந்தமான மயானங்களில் இனிமேல் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. அனைத்தும் இனிமேல் இலவசமாக செய்யப்படும்.
தகனம் செய்வது, புதைப்பது உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவினை இனிமேல் மாநகராட்சியே பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்தார்