+2 விடைத்தாள்: டம்மி எண் குளறுபடியால் கல்வி அதிகாரி மாற்றம்
திருச்சி: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் டம்மி எண் வழங்குவதில் குளறுபடி செய்ததால் திருச்சி மாவட்ட முதன்மை அதிகாரி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளி மற்றும் பெரியார் மணியம்மை மேல்நிலை பள்ளிகளில் நடந்து வருகிறது. இதில், புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளி மைய தலைமை அலுவலராக திருச்சி முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.
விடைத் தாள்களை திருத்த ஆசிரியர்களிடம் வழங்கும்போது முறைகேடு நடக்காமல் தடுக்க டம்மி எண்களை வழங்குவது வழக்கம். அந்தந்த மையத்தின் தலைமை அலுவலர்கள்தான் இந்த எண்களை வழங்கவேண்டும்.
ஆனால், புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளி மையத்தில் விடைத்தாள்களுக்கு வழங்கப்பட்ட டம்மி எண்களில் குளறுபடி ஏற்பட்டது.
அதிகாரி சுவாமிநாதனின் அனுபவமின்மை காரணமாக இந்த குளறுபடி நடந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இதன்பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்தது.