6வது ஊதிய குழு பரிந்துரையை ஆராய குழு
டெல்லி: ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையால் ராணுவம், பொதுத்துறை அதிகாரிகள் பெரும் அதிருப்தியடைந்துள்ளதால் இந்த பரிந்துரைகளை ஆராய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், வீரர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டிமிடப்பட்டது. இதற்காக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான 6வது ஊதியக் குழுவை மத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டு அமைத்தது. இந்த கமிஷன் தனது அறிக்கையை கடந்த மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதன்படி சராசரியாக அனைத்து அதிகாரிகள், அலுவலர்களுக்கு 40 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. இது ராணுவத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து முப்படை அதிகாரிகள் பலர் ராஜினாமா செய்துள்ளனர்.
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் மீறினால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்றும் பல்வேறு ஊழியர் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் ரயில்வே ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கப் போவதாக மிரட்டி வருகின்றனர்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்க்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபில் கூறியதாவது,
ஊதியக் குழுவின் ஏற்றத் தாழ்வுகளை களையவும், பரிந்துரையை ஆராயவும் உயர்நிலைக்குழு ஏற்படுத்தப்படும். இக்குழுவின் தலைவராக அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் நியமிக்கப்படுவார்.
இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து மத்திய அமைச்சரவை விரைவில் அமல்படுத்தும்.
மேலும் முப்படையினர், போலீஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை களைவது குறித்து ஆராய மத்திய நிதித்துறை செயலாளர் சுப்பாராவ் தலைமையில் ஏற்கனவே உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே உள்ள சம்பள வேறுபாடுகளை நீக்குவது குறித்தும் ஆராயப்படும் என்றார் சிபல்.












Click it and Unblock the Notifications