திருச்சியில் பயங்கர விபத்து - 6 பேர் பலி
திருச்சி: திருச்சியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பேபி என்பவர் தனது குடும்பத்தினருடன் டாடா குவாலிஸ் காரில், வேளாங்கண்ணி கிளம்பினார். அவருடன் வேனில் மனைவி ரீட்டா (45), மகள்கள் செபி (12), எபி (9), மகன் அலுசியா (4), பேபியின் தாயார் மேரி (72) மற்றும் உறவினர் லீமா (53) ஆகியோர் இருந்தனர். வேனை பேபியின் மகன் ஜான்சன் ஓட்டினார்.
இன்று காலை இவர்கள் வந்த வேன் திருச்சி அரியமங்கலம் ரவுன்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் புறம், கும்பகோணத்திலிருந்து திருச்சி வந்த அரசுப் பேருந்து குவாலிஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில், குவாலிஸ் பயங்கரமாக சேதமடைந்து, அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஜான்சன், லீமா, பேபி, மேரி, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ரீட்டாவும், அலுசியாவும் சிகிச்ைச பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
விபத்தில் அரசுப் பேருந்தின் டிரைவர் மணிவண்ணனும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தால் அந்த சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபப்ட்டது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க விபத்தை ஏற்படுத்திய பேருந்தில் பயணித்த பயணிகள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லையாம். அந்தப் பகுதி வழியாக இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீஸார் சிலர் பார்த்து விரைந்து வந்து தகவல் கொடுத்து மீட்புப் பணியை முடுக்கி விட்டனர்