'கிரீமி லேயர்': கருணாநிதிக்கு அர்ஜூன் சிங் கடிதம்

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இதில் கிரீமி லேயர் இடம் பெறாது என அறிவித்துள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. கிரீமிலேயரை இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்ைக விடுத்துள்ளன.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கை பார்த்து நேரில் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு, மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் சமூக நீதி வேண்டி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமூக நீதிக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு பற்றி நீங்கள் எழுதியிருந்த உணர்வுப்பூர்வமான கடிதம் என்னை மிகவும் நெகிழ வைத்தது.
இந்த விஷயத்தில் இந்த அளவுக்கு ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட்டதற்கு நீங்கள் எனக்கு தொடர்ந்து வழங்கிய ஆதரவும், வழிகாட்டுதலும் தான் என்பதை இங்கு நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த திட்டத்தை நாம் அமல்படுத்த இருக்கும் அதே வேளையில் இந்தப் பிரச்சினையில், தொடர்புடைய வேறு சில விவகாரங்கள் குறித்து நம்முடைய கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
இதற்கும் உங்களுடைய மேலான ஆதரவை நான் நாடுகிறேன் என்று கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.












Click it and Unblock the Notifications