கருணாநிதி பிறந்த நாளன்று சேது கால்வாயில் கப்பல்: ஆற்காடு வீராசாமி
மதுரை: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை அளிக்கும். அப்படி நடந்தால் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய துணை மின் நிலையத்திற்கு ஆற்காடு வீராசாமி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் பின்னர் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு முடிக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
கடந்த பாஜக ஆட்சியில் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கு விடிவு பிறந்துள்ளது.
திமுக ராமருக்கு எதிரான கட்சியல்ல. ஆனால் ஆதாம் பாலம் ராமரால் கட்டப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் நிலையும் மாறும், எரிபொருளும் சேமிக்கப்படும்.
தமிழகத்தை உபரி மின்சாரம் உடைய மாநிலமாக மாற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 90 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 12 மின் நிலையங்கள் வரவுள்ளன என்றார் வீராசாமி.