கமாண்டோ படை பாதுகாப்பு கோரும் ஜெ!
சென்னை: தனக்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் குண்டு துளைக்காத கார் தரப்பட வேண்டும் என்றார்.
முன்பே அவருக்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் கொடுக்கப்பட்டதையும், ஆனால், அது அம்பாசிடர் என்பதால் அதை ஜெயலலிதா திருப்பி அனுப்பிவிட்டதையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது.
இதையடுத்து அந்தக் கார் மீண்டும் ஜெயலலிதாவுக்கு தரப்பட்டது. இந்த முறை அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
இந் நிலையில் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதாவின் சார்பில் கூடுதல் மனு ஒன்றை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில்,
எனக்கு இன்னும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எனது வீட்டுக்கு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் போதிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை. எனக்கு கமாண்டோ படை போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா சமாதிக்கு சென்றபோதும் அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமாதி, எம்.ஜி.ஆர். வீடு ஆகியவற்றுக்கு சென்ற போதும் தமிழக அரசு எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை.
அது தொடர்பாக கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதி வரும் 21ம் தேதிக்குள் கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆனால், ஏற்கனவே ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு விசாரணை முழுவதும் முடிந்துவிட்டதால் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications