2 அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
சென்னை: சட்டசபை நடவடிக்கைககளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் வி.பி.கலைராஜன், கோ.ஹரி ஆகியோரை இந்த கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள தடை விதித்து சபாநயாகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை சட்டசபை கூடியதும் தலைமைச் செயலாளர் திரிபாதி, உளவுத்துறை ஏடிஜிபி உபாத்யாயா ஆகியோரது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக வந்த செய்தி குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் கோஷமிட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி விளக்கமளிக்க முயன்றபோதும் அவரை பேச விடாமல் அதிமுகவினர் அமளி செய்தனர்.
இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைககளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் வி.பி.கலைராஜன், கோ.ஹரி ஆகியோரை இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநயாகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
ஓ.பி. பேட்டி:
முன்னதாக அவையிலிருந்து வெளியேறிய அதிமுக சட்டசபை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில்,
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் போன் பேச்சு ஒட்டு கேட்கப்படுகிறது. ஏற்கனவே இது போன்று ஒரு சம்பவம் நடந்தது.
தற்போது தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஆகியோர் இடையே நடந்த உரையாடல் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்க முயன்றால் அனுமதி அளிக்காமல் வெளியேற்ற உத்தரவிடுகிறார்கள்.
கர்நாடகத்தில் இது போன்று போன் ஒட்டு கேட்பு பிரச்சினை வந்தபோது அப்போது அங்கு முதல்வராக இருந்த ஹெக்டே பதவியை ராஜினாமா செய்தார்.
நத்தம் விசுவநாதன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை அதிகாரியை மாற்றுவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேச எங்களுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என்றார்.
முன்னதாக அதிமுகவினரை தொடர்ந்து மதிமுக எம்எல்ஏக்களும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications