போன் ஒட்டுக் கேட்பு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ரெய்டு?!
சென்னை: தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கபட்டதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக தனிப்படை விசாரணை தொடங்கியுள்ளது. இந்தக் குழுவினர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி உபாத்யாயாவும் கொடநாடு எஸ்டேட் வழக்கு குறித்துப் பேசிக் கொண்டது ஒட்டுக் கேட்கப்பட்டதாக டெக்கான் குரோனிக்கிள் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதுதொடர்பான டேப் ஆதாரத்தையும் ஜெயா டிவி ஒளிபரப்பிய பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந் நிலையில் ஒட்டுக் கேட்பது எங்கு நடந்தது என்பதைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு இயக்குனர் அலுவலகத்தில் நேற்றிரவு இந்தப் படையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் இருந்து டேப் பதிவு செய்யப்பட்டு வெளியே சென்றிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப் படையினர் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த ரெய்ட் குறித்த தகவலை எந்த அதிகாரியும் உறுதி செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயாவும் இதுகுறித்து பதில் சொல்ல மறுத்து விட்டார்.