கோவை யார்டில் என்ஜின் தடம் புரண்டது-ரயில்கள் தாமதம்
கோவை: கோவை ரயில் நிலைய யார்டில் ஷன்டிங் ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால் காலை 6.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கோவையில் இருந்து சென்னைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 6.30 மணிக்கு புறப்படுகிறது. இரவில் யார்டில் நிறுத்தப்படும் இந்த ரயில் பெட்டிகள் காலையில் ஷன்டிங் என்ஜின் மூலம் மீண்டும் பிளாட்பாரத்திற்கு கொண்டு வரப்படும்.
அதேபோல் இன்று அதிகாலை 5 மணிக்கு யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை இழுத்து வர ஷன்டிங் ரெயில் என்ஜின் சென்றது.
ஷன்டிங் ரயில் என்ஜின், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் உள்ள பகுதிக்கு வருவதற்காக லைன்மேன் டிராக்கை மாற்றினர். அப்போது ஷன்டிங் என்ஜின் டிராக் மாறக்கூடிய இடத்தில் சென்று கொண்டிருந்ததை லைன்மேன் கவனிக்கவில்லை. இதனால் ஷன்டிங் ரயில் என்ஜின் தடம் புரண்டது.
இதையடுத்து என்ஜினை டிரைவர் உடனடியாக நிறுத்தினார். தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடம் புரண்ட ஷன்டிங் ரயில் என்ஜினை தண்டவாளத்தில் தூக்கி வைக்க, மீட்பு என்ஜின் ஈரோட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது.
காலை 8.15 மணிக்கு மீட்பு என்ஜின் மூலம் தடம் புரண்ட ஷன்டிங் ரயில் என்ஜின் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து காலை 6.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதனால் மற்ற ரயில்கள் மாற்று லைன் வழியாக ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பிளாட்பாரங்களுக்கு கொண்டு வரப்பட்டன.
கோவையில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து ரெயில்கள் தடம்புரண்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேரன் எக்ஸ்பிரசின் பெட்டிகள் தடம்புரண்டன. அடிக்கடி ரயில்கள் தடம் புரள என்ன காரணம் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications